Saturday, 13 June 2009

சிந்தனை செய் மனிதமே...

இந்த கட்டுரையும் எப்போதும் போல் என் மனதில் ஓடும் எண்ண அலைகளில் தெரித்து விழுந்த சில சாரல் துளிகளே... கற்பனையோ, கவிநயமோ, பிரமிப்போ இல்லாத இன்னுமொரு கட்டுரை.

மனவளர்ச்சி குன்றியவர்களுக்காக நடத்தப்படும் ஒரு இல்லத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எல்லோரையும் போல், எனக்கும் இது போன்று சமூக அக்கறைகொண்ட செயல்களில் ஈடுபட வேண்டும் என்கிற ஆவல் உண்டு.ஆவல் மட்டுமே இருந்ததே ஒழியே செயல்வடிவம் கொடுக்காமல் போனேன். சென்ற மாதம் சில நல்ல நண்பர்களின் வழியே என்னை அவர்களோடு இணைத்துக்கொண்டேன்.

அந்த நிகழ்வை முடித்து வந்ததும் என் மனதில் தோன்றியது....

உண்மையிலேயே நான் மனமுவந்து தான் இந்த செயலில் ஈடுபடுகிறேனா? அடுத்த நாளே எப்போதும் போல் எனது சராசரி வாழ்க்கைக்கு மீண்டும் சென்று விட்டேன். அப்படியென்றால் அந்த ஒரு நாள் நான் நடித்திருக்கிறேனா? இப்படி ஒரு போலி நடிப்பால் என்னை நானே ஏமாற்றி யாரை வெற்றி கொள்ளப்போகிறேன். எனது விசாலப்பார்வை விரிந்து விட்டதாக உணரவில்லை.

மனம் வளர்ச்சி குன்றியவர்களுடன் பேசிய போதும், விளையாடிய போதும் ஒரு வித திருப்தி எனக்குள் வந்தது உண்மை. மனது மகிழ்ந்தது நிஜம். இந்த உணர்வு சரியானதில்லையே. மனம் வருந்தியிருக்க வேண்டிய நிகழ்வுக்கு எப்படி என்னால் சந்தோஷப்பட முடிந்தது?

நான் உரையாடிய அந்த குழந்தைகள், அடுத்த நாள் சாப்பிட்டிருப்பார்களா... இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்களோ என்று எனக்கு தோன்றவில்லையே. ஏன் அது? அப்படியெனில் எனது அந்த ஒரு நாள் சேவை புகைப்படம் எடுத்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தானா? அப்படியெனில் எனக்குள் எனக்கும் தெரியாமல் ஒருவித அரசியல்புத்தி மறைந்திருக்கிறதா?

எந்த வினாவிற்குமே என்னிடம் விடையில்லை. "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என்பது போல் மீண்டும் மீண்டும் இது போன்ற காரியங்களில் என்னை தொடர்ந்து ஈடுபடுத்தினால், உண்மையான உணர்வு ஒரு இழைபோல என்னுடனே ஒட்டிக்கொள்ளுமா? முடியலாம்... குறைந்தது 60 சதவீத சிந்தனையையாவது இவற்றின் பால் செலுத்தினால் சாத்தியமாகலாம்... முயற்சிக்கிறேன்.

இது போன்ற காப்பகங்களின் மீது சமூக ஆர்வளர்களின் பார்வை மிகவும் அதிகமாகி இருக்கிறது. பிறந்த நாள், திருமண நாள் போன்ற நிகழ்வுகளோடு அல்லாமல், மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடை கொடுத்து உதவி வருகின்றனர். உண்மையான நோக்கத்தோடு தொடங்கப்பட்டு, சேவை மனப்பான்மையோடு நடத்தப்படும் காப்பகங்களுக்கு நிதிச்சுமை முன் போல் அதிகம் இல்லை. ஆனால் அடுத்து சொன்ன செய்தி தான் ஆச்சர்ய மூட்டியது.

இவர்களின் காப்பகத்தின் பெயரில் நன்கொடை ரசீது அச்சடித்து ஒரு கூட்டம் பொது மக்களிடம் நன்கொடை வசூல் வேட்டை செய்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்களாம்.

காப்பகங்களுக்கு உணவு தேவையென்றால் பெரும்பாலான திருமண மண்டபங்களில் இருந்தும், உணவகங்களில் இருந்தும் வந்து குவியுமாம். ஆனால் காலையில் தயாரித்த உணவில் மீதமிருப்பது வந்து சேர மதியம் ஆகுமாம். அதனை இவர்களுக்கு ஊட்டும் போது ஏற்படும் இன்னல்களையும் எடுத்து சொன்னார். அப்போது முடிவெடுத்தேன். இனி ஒரு போதும் மீதமுள்ள உணவை பிறருக்கு தருவதில்லை. பெரும்பாலும் வீட்டில் வேலை செய்பவருக்கு தான் தருவோம்) சமைத்தவுடன் கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு, மீதியை நாம் உண்பது. இத்தனை வருடங்களாக சமைத்து பழகிப்போன நம் குடும்பத்திற்கு எவ்வளவு தேவை என்பது தெரிந்திருக்க வேண்டும். எனவே முதலியேயே எடுத்து வைத்து, சுவை மாறாமல் அவர்களுக்கு தருவது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை.

மனவளர்ச்சி குன்றியவர்களை பராமரிப்பது அவ்வளவு எளிதான காரணமாக தெரியவில்லை. காரணம் அவர்களுக்கு பசியும் தெரியாது. எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பதும் தெரியாது... ஏன் சிலருக்கு சாப்பிடவே தெரியாது. அவர்களின் தேவை உணர்ந்து உணவளிப்பது சாதாரண காரியம் இல்லை. அங்கிருந்தவர்களுக்கு ஐஸ்கிரீம் கொடுத்தோம். கொடுப்பதற்கு முன்னர் மூன்று பேரை தனியாக அழைத்து சென்று விட்டனர். காரணம் அவர்களுக்கு ஐஸ்கிரீம் ஒத்துக்கொள்ளாதாம். வலிப்பு வருமாம். இது போன்ற சின்ன சின்ன உபசரிப்புகள் ஒவ்வொருவரும் அனைத்து இடங்களிலும் பின்பற்ற முயற்சித்தான் வாழ்க்கை எவ்வளவு அழகாகும் [:)]

உடல் நிலை சரியில்லாதவர்களில் சிலரை அரசு மருத்துவ மனைகளுக்கு கொண்டு செல்லும் போது, அவர்கள் குணமடைந்ததும் காப்பகத்திற்கு உடனே அனுப்ப மருத்துவர்கள் மறுக்கின்றனராம். இவர்கள் அநாதைகள் தானே... மருத்துவ மாணவர்களுக்கு உபயோகப்படுவார்கள் என அங்கேயே வைத்துக்கொள்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு தேவையான பராமரிப்பு அவ்வளவாக சரியில்லையாம். எங்கே தவறு இருக்கிறது என்பது எனது எல்லைக்கு அப்பாற்பட்டது. நான் உணர வேண்டியது... எல்லோரையும் அரவணை, மரியாதையுடன் நடத்த கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.

இதனை இங்கே பதிவது முறையா என்று தெரியவில்லை. தவறிருந்தால் மன்னிக்கவும். காப்பகத்தில் இருக்கும் சிலர் பருவமடைந்த பெண்கள் (பார்ப்பதற்கு சிறுமிகள் போல் தான் தோற்றம் அளித்தனர்...உருவத்தில், செயலில் என அனைத்திலும்). அவர்களுக்கு மாதவிடாய் வருவது கூட தெரியாதாம். அது போன்ற தருணங்களில் சுத்தம் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து அதனை மாற்றுவதில் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்கின்றனர். இப்படி பணிசெய்யும் இவர்கள் எங்கே? கடைகளில் நாப்கின் பார்த்தேலே முகம் சுளிக்கும் நான் எங்கே? மனது குறுகிப்போனது. சகிப்புத்தன்மையை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன் என்பது புரிந்தது.

இந்த நிகழ்வில் நான் உணர்ந்து கொண்டது....

உதவி என்பது முடியாதவர்களுக்கு மட்டுமே செய்வதில்லை
முடிந்ததெல்லாம் செய்வது தான்.

சில புகைப்படங்கள் - உங்கள் பார்வைக்கு

http://picasaweb.google.co.in/ritetosuresh/Samarpana?feat=directlink

Monday, 8 June 2009

மனிதம் - கற்று கொண்டது



ஆன்மீகத்தால் இணைந்த சில உள்ளங்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் பஜனையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பதிவின் நோக்கம் ஆன்மீக குருவின் புகழ் குறித்ததோ அல்லது அதன் மகிமை குறித்ததோ இல்லை. அதனை ஏற்பாடு செய்தவர்களிடம் என்னைக்கவர்ந்த சிலவும், நான் பின்பற்ற நினைக்கும் சிலவற்றையுமே இங்கே பதிவு செய்கிறேன்.

இந்தியாவில் இருக்கும் ஒரு ஆன்மீகப்பெரியவரின் ஈர்ப்பால், இங்கிலாந்தில் இருக்கும் அவரின் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும், முதல் ஞாயிற்றுக்கிழமையில் ஒன்று சேர்ந்து பஜனை, சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, தியானம் முதலானவைகளை நடத்துகின்றனர். ஒருங்கிணைப்பாளரின் வீட்டில் ஒரு அறையை இதற்காகவே உபயோகப்படுத்துகிறார்கள்.

அந்த அறையில் அனைத்து மதத்துக்கடவுளும் இருந்தது. இவர்கள் இங்கே முன்னிறுத்துவது மன அமைதி. மதமோ, இனமோ தேசமோ இல்லை.நடுவில் இந்து கடவுள்... விளக்கிற்கு பதிலாக மெழுகு. அதனை தாங்கி நிற்பது மேரி மாதா. வலப்புறம் புத்தர் சிலை. இடப்புறம் அரபி எழுத்தில் ஒரு புகைப்படம். இந்த பரந்த மனப்பான்மை எல்லோருக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? குறைந்த பட்சம் வேற்று மதத்தை வெறுக்கும் மனோபவம் இல்லாமல் இருந்தாலே போதுமே.

ஊதுபத்தி ஏற்றுவதற்கு முன் "Anyone Allegetic to Incense" ன்னு கேட்டப்போ மனிதத்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தால் கவரப்பட்டேன். இன்னைக்கும் நம்ம ஊர்ல யாகம் வளர்க்கும் போது கடைசியில வருமே ஒரு பெரும்புகை.. அப்போதெல்லாம் நாம் இப்படி ஒரு முறையாவது யோசித்திருப்போமா?

அங்கே வந்திருந்தவரில் ஒருவர் ஒரு அறக்கட்டளை நிறுவி பல நல்ல காரியங்களை செய்து வருகிறாராம். அறக்கட்டளையின் பெயர் "Wherevertheneed" (http://www.wherevertheneed.org.uk). இது பத்தி சொல்லும் போது "Big name for a small charity" ன்னு சிரிச்சிகிட்டே சொன்னார். இப்படி யாராச்சும் சொன்னா உடனே நாமும் பங்கெடுத்துக்கணும்ன்னு ஒரு ஆர்வம் வரும். நானும் உங்களோட சேர்ந்து பங்கெடுக்க விரும்புகிறேன்னு சொன்னேன். (இது வரைக்கும் சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இப்படி கேட்டிருக்கேன். ஆனா எதுவுமே செஞ்சதில்லை). அதுக்கு அவர் சொன்ன பதில் நான் உங்க ஊருக்கு தான் பண்றேன். அப்படி உண்மையாகவே உங்களுக்கு உதவி செய்ய விருப்பம் இருந்தா உதவி தேவைப்படும் இடத்தை மட்டும் எங்களுக்கு சொல்லுங்க ன்னு சொன்னார்.

"இந்தியா உங்களுக்கு பிடிச்சிருக்கா" ன்னு கேட்டதுக்கு , சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு கூட எந்த உதவியா இருந்தாலும் இந்தியாவில் கிடைக்கும்...இங்கே கிடைக்காதுன்னு சொன்னார். இதுல எவ்வளவு அர்த்தம் உள்ளடங்கி இருக்கு பார்த்தீங்களா?

தெரிஞ்சவங்களையே வீட்டுக்குள்ள விடாத பழக்கம் தான் நம்முடையது. யாருன்னே தெரியாத என்னை மாதிரி சுமார் 30க்கும் மேற்பட்டவர்களை அவரின் வீட்டில் முழு சுதந்திரமாக அனுமதித்த பாங்கு... அரவணைத்த விதம்...அடடா... இன்னும் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது என்று தோன்றியது...

ரூபாயில் சம்பாதிக்கும் நாம், டாலரில் செலவு செய்து itunes ல download பண்ணி நம்மை நாகரீகமானவனாக காட்டிக்கொள்கிறோம். இவர்கள் "கணேச சரணம்... சரணம் கணேசா" அழகாக பாடி நம்மை ஆட்கொண்டுவிட்டனர்.

கொஞ்சம் தீர்க்கமாக யோசித்துப்பார்க்கிறேன்... இவர்களிடம் என்னை ஈர்த்த அனைத்து குணங்களும் இவர்கள் நம்மிடம் இருந்து கற்று கொண்டது. இந்த பழக்க வழக்கம் எனக்கு அன்னியமாகிப்போனது இன்னும் எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.

மேலும் சில புகைப்படங்கள்...உங்கள் பார்வைக்கு