ஆன்மீகத்தால் இணைந்த சில உள்ளங்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் பஜனையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பதிவின் நோக்கம் ஆன்மீக குருவின் புகழ் குறித்ததோ அல்லது அதன் மகிமை குறித்ததோ இல்லை. அதனை ஏற்பாடு செய்தவர்களிடம் என்னைக்கவர்ந்த சிலவும், நான் பின்பற்ற நினைக்கும் சிலவற்றையுமே இங்கே பதிவு செய்கிறேன்.
இந்தியாவில் இருக்கும் ஒரு ஆன்மீகப்பெரியவரின் ஈர்ப்பால், இங்கிலாந்தில் இருக்கும் அவரின் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும், முதல் ஞாயிற்றுக்கிழமையில் ஒன்று சேர்ந்து பஜனை, சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, தியானம் முதலானவைகளை நடத்துகின்றனர். ஒருங்கிணைப்பாளரின் வீட்டில் ஒரு அறையை இதற்காகவே உபயோகப்படுத்துகிறார்கள்.
அந்த அறையில் அனைத்து மதத்துக்கடவுளும் இருந்தது. இவர்கள் இங்கே முன்னிறுத்துவது மன அமைதி. மதமோ, இனமோ தேசமோ இல்லை.நடுவில் இந்து கடவுள்... விளக்கிற்கு பதிலாக மெழுகு. அதனை தாங்கி நிற்பது மேரி மாதா. வலப்புறம் புத்தர் சிலை. இடப்புறம் அரபி எழுத்தில் ஒரு புகைப்படம். இந்த பரந்த மனப்பான்மை எல்லோருக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? குறைந்த பட்சம் வேற்று மதத்தை வெறுக்கும் மனோபவம் இல்லாமல் இருந்தாலே போதுமே.
ஊதுபத்தி ஏற்றுவதற்கு முன் "Anyone Allegetic to Incense" ன்னு கேட்டப்போ மனிதத்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தால் கவரப்பட்டேன். இன்னைக்கும் நம்ம ஊர்ல யாகம் வளர்க்கும் போது கடைசியில வருமே ஒரு பெரும்புகை.. அப்போதெல்லாம் நாம் இப்படி ஒரு முறையாவது யோசித்திருப்போமா?
அங்கே வந்திருந்தவரில் ஒருவர் ஒரு அறக்கட்டளை நிறுவி பல நல்ல காரியங்களை செய்து வருகிறாராம். அறக்கட்டளையின் பெயர் "Wherevertheneed" (http://www.wherevertheneed.org.uk). இது பத்தி சொல்லும் போது "Big name for a small charity" ன்னு சிரிச்சிகிட்டே சொன்னார். இப்படி யாராச்சும் சொன்னா உடனே நாமும் பங்கெடுத்துக்கணும்ன்னு ஒரு ஆர்வம் வரும். நானும் உங்களோட சேர்ந்து பங்கெடுக்க விரும்புகிறேன்னு சொன்னேன். (இது வரைக்கும் சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இப்படி கேட்டிருக்கேன். ஆனா எதுவுமே செஞ்சதில்லை). அதுக்கு அவர் சொன்ன பதில் நான் உங்க ஊருக்கு தான் பண்றேன். அப்படி உண்மையாகவே உங்களுக்கு உதவி செய்ய விருப்பம் இருந்தா உதவி தேவைப்படும் இடத்தை மட்டும் எங்களுக்கு சொல்லுங்க ன்னு சொன்னார்.
"இந்தியா உங்களுக்கு பிடிச்சிருக்கா" ன்னு கேட்டதுக்கு , சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு கூட எந்த உதவியா இருந்தாலும் இந்தியாவில் கிடைக்கும்...இங்கே கிடைக்காதுன்னு சொன்னார். இதுல எவ்வளவு அர்த்தம் உள்ளடங்கி இருக்கு பார்த்தீங்களா?
தெரிஞ்சவங்களையே வீட்டுக்குள்ள விடாத பழக்கம் தான் நம்முடையது. யாருன்னே தெரியாத என்னை மாதிரி சுமார் 30க்கும் மேற்பட்டவர்களை அவரின் வீட்டில் முழு சுதந்திரமாக அனுமதித்த பாங்கு... அரவணைத்த விதம்...அடடா... இன்னும் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது என்று தோன்றியது...
ரூபாயில் சம்பாதிக்கும் நாம், டாலரில் செலவு செய்து itunes ல download பண்ணி நம்மை நாகரீகமானவனாக காட்டிக்கொள்கிறோம். இவர்கள் "கணேச சரணம்... சரணம் கணேசா" அழகாக பாடி நம்மை ஆட்கொண்டுவிட்டனர்.
கொஞ்சம் தீர்க்கமாக யோசித்துப்பார்க்கிறேன்... இவர்களிடம் என்னை ஈர்த்த அனைத்து குணங்களும் இவர்கள் நம்மிடம் இருந்து கற்று கொண்டது. இந்த பழக்க வழக்கம் எனக்கு அன்னியமாகிப்போனது இன்னும் எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.
மேலும் சில புகைப்படங்கள்...உங்கள் பார்வைக்கு
No comments:
Post a Comment