Sunday, 24 May 2009

அன்பு

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவது தான் அன்பு. எந்த சூழ்நிலையிலும் மாறாதது தான் அன்பு. அளவிட எந்த ஒரு அளவுகோலும் இல்லாதது தான் அன்பு. பகிர்வதால் குறையாதது அன்பு.

மனிதர்களோடு நின்றுவிடாமல், நாடு, மொழி,இனம், தாவரம், விளங்கு, இருக்கிறதா இல்லையா என்று தெரியாத கடவுள் வரை எல்லையில்லாமல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த அன்புக்குத்தான் எத்தனை விளக்கங்கள்...வரையறைகள்...

எதிர்பார்ப்பு இல்லாதது எப்படி அன்பாக முடியும்? ஏடுகளிலும், இலக்கியங்களிலும் இது போன்ற அன்புகளுக்கு நீங்கா இடம் இருக்கலாம். நிஜ வாழ்க்கையில் முடியுமா? சாத்தியமா? சரி.. இங்கே எதிர்பார்ப்பு என்பது என்ன?

இன்னைக்கு இவன் கூட போனா ஒரு டீ வாங்கித்தருவான் என்பதற்காக "மச்சி" பாஷையோடு உடன் உலா வருவதா?

இவனுக்கு நெட்வொர்க் அதிகம்...ஒரு வழியில் இல்லனாலும் இன்னொரு வழியில் உபயோகப்படுவான் என்று தொடர் நட்பில் இருப்பதா?

ஹாய் சொன்னா, ஹலோ சொல்லுவான் என்கிற நம்பிக்கையில் சொல்வதா?

விளங்கவில்லை. ஆனால் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு...உண்ணுவார் இல்லாமல் சமைக்கும் உணவைப்போன்றது. சீக்கிரம் கெட்டுப்போவதோடு மட்டும் இல்லாமல் எதற்கும் உபயோகமில்லாமல் போகும்.

எதிர்பார்ப்புகள் இருக்கனும். அது தான் அன்பு.சில எதிர்பார்ப்புகள் நம் இருக்கும் போது வெளிப்படுவதில்லை. இல்லாதிருக்கும் போது எங்கே இவன் என்கிற தேடல் . அந்த தேடலின் விளைவு அன்பின் வெளிப்பாடு. இதோ சற்றே விளக்கமாய்.....

இரண்டு வாரமாக என்னால் அலுவலகம் செல்ல முடியாத சூழல். திடீரென இன்று ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு (எனது தொலைபேசி எண் அவருக்கு தெரியாது. எங்களின் நெருக்கம் அலுவலகத்தில் எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்)

என்ன சுரேஷ் ... இங்க தான் இருக்கீங்களா...
ரொம்ப நாளா ஆபிஸ் பக்கம் ஆளையே காணோம்.
ரெண்டொரு வாட்டி நீங்க இருக்க சீட் பக்கமா கிராஸ் பண்ணி போனேன்...
நீங்க இல்லை..
சரி எங்கயாச்சும் மீட்டிங் போய் இருப்பீங்கன்னு நினைச்சேன்.

நாளாக நாளாக அழுத்தம் ஜாஸ்தி ஆகி, ஒரு வழியா உங்க நெம்பர் கண்டு பிடிச்சேன். எப்படி இருக்கீங்க? இப்படி விடாமல் பேசினார்.

எனக்கு ஆச்சர்யம் ஒரு பக்கம். அதைவிட அளவிட முடியாத மகிழ்ச்சி இன்னொரு பக்கம். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு விசாரிப்பு.அந்த விசாரிப்பில் ஒரு அக்கறை. அந்த அக்கறையில் எனக்கு அவர் மீது ஒரு வித ஈர்ப்பு. இந்த அங்கீகாரம் அன்பிற்கு முதற்படி. இது மிக மிக அவசியம்.

ஹலோ கமல். கொஞ்சம் உடம்பு சரியில்லை. ஜி.பி கொஞ்சம் ரெஸ்ட் ல இருக்க சொல்லி இருகாங்க. செவ்வாய்க்கிழமை மறுபடியும் வரச்சொல்லி இருக்காங்க. மத்தப்படி ஒன்னும் இல்லைங்க. வீட்ல தான் இருக்கேன். வீட்டுக்கு வர்றதுன்னா வாங்களேன். ஒரு சராசரியான பதில்.

செவ்வாய்க்கிழமை காலையில் மீண்டும் கமலிடம் இருந்து போன். சுரேஷ் ...எதாச்சும் உதவி வேணுங்களா? நான் வேணும்ன்னா உங்க கூட ஹாஸ்பிட்டலுக்கு வரட்டுங்களா? மீண்டும் எதிர்பார்ப்பு இல்லாத ஒரு பரிவு. தேங்க்ஸ் கமல்... தேவைன்னா கண்டிப்பா கூப்பிட்றேன் -ன்னு சொல்லிட்டு முடிச்சிக்கிறேன்

சாயங்காலம் கமலிடம் இருந்து மறுபடியும் போன். ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்தீங்களா? டாக்டர் என்ன சொன்னார்? எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க சுரேஷ்.... இங்க தனியா இருக்கீங்க...இந்த ஊர்க்காரனுங்க ஓவர் கன்ஃபூஸ் பண்ணுவானுங்க. இப்படியே நட்பின் அடர்த்தி அதிகம் ஆகிறது.

இரண்டு வாரத்துக்கு முன்ன வரைக்கும் யாருன்னே தெரியாத கமல் இப்போது ஓரளவிற்கு தினமும் நினைக்கக்கூடிய உறவாக மாறுகிறார்.

அடுத்த நிலை

உடல்நிலை சரியாகி மீண்டும் அலுவலகம் செல்கிறேன் நான். கமலோடு நீண்ட உரையாடல். அப்படியே அவரோடு காஃபி. மனதுக்கு நிறைவான உறவாக கமல் மாறுகிறார். இந்த விசாரிப்புகளுக்கு முன் கமலின் வட்டம் வேறு. எனது வட்டம் வேறு. இப்போது கமல் என் நெருங்கிய வட்டத்திற்குள் வந்து விட்டதாய் ஒரு நினைப்பு.

அடுத்த நாள் அலுவலகத்தில்...
கமல் காஃபி வர்றீங்களா?
இல்லை சுரேஷ்...இப்போ தான் சாப்டேன். நீங்க போய்ட்டு வாங்க ன்னு ஒரு புன் முறுவல்.

மதியம் சாப்பிடப்போகும் முன், கமலுக்கு ஒரு போன்.

லஞ்ச் போகலாமா கமல்... ?
நானும் கிளம்பிகிட்டே இருக்கேன். கேண்டீன்ல மீட் பண்ணுவோம் ன்னு பதில்

சாய்ங்காலம் வீட்டுக்கு போறதுக்கு முன்ன கமலுக்கு ஒரு போன்.

வீட்டுக்கு கிளம்புவோமா?
நான் வீட்டுக்கு வந்து அரைமணி நேரம் ஆச்சிங்க சுரேஷ்.

வீட்டுக்கு போறதுக்கு முன்ன ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லிட்டு போய் இருக்கலாமே ன்னு ஒரு எனக்குள் ஒரு யோசனை
(இது தான் எதிர்பார்ப்பின் தொடக்கம்)

சில நாட்களில் கமலுக்கு என்னோடு காஃபிக்கோ, லஞ்ச்க்கோ வர விருப்பமில்லை. அவருக்கென்று ஒரு கேங்க். அவங்களோட இருக்கத்தான் அவருக்கு ஆசை என்று தெளிவாக தெரிந்து விடுகிறது. இதில் தவறேதும் இல்லையே. எனது எதிர்பார்ப்பு நிறைவேறாத போது எனக்கு ஒரு விரக்தி. இருந்தாலும் கமலை வெறுக்க முடியவில்லை. யாருமே விசாரிக்காத போது என்னை விசாரிச்சாரே ... பரிவா பேசினாரே... மனசு அடிக்கடி நினைக்கிது.

கமலிடம் ஒட்ட முடியாவிட்டாலும் வெறுக்க முடியல. இப்படி ஒரு நிலையில் எத்தனை நாட்களுக்கு இந்த உறவு நீடிக்கும்? இதைத்தான் எதிர்பார்ப்பு என்கிறேன் நான்.

இசைதான் வாழ்வு... இசை தான் உயிர்...இசை தான் உலகம் என்று இசைக்கு முழுவதுமாக தன்னை அர்பணித்தாலும், கலைஞனின் இசை ரசிகனை சென்றடைய வேண்டும். ரசிகன் அதனை வரவேற்க வேண்டும்.

வரவேற்பில்லாத கலைஞனின் இசையும் எதிர்பார்ப்பில்லாத அன்பும் ஒன்று தான்

எதிர்பார்ப்புகளால் மட்டுமே அன்பு வலுப்பெறும். உங்களின் எதிர்பார்ப்பு நிராகரிக்கப்படும் போது, உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பவரை அடையாளம் காணுங்கள்.

அன்பு ஆழமாகும்
வாழ்க்கை வசப்படும்

1 comment:

  1. Aazhamana Sindhanai. Paathirangal verum Nizhal thaan. Nijam ... ?

    ReplyDelete